கோவை: தனியார் விடுதிகளுக்கு வணிக கேஸ் சிலிண்டர்களை வழங்குமாறு கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் சில உணவகங்கள் அவர்களின் உணவு வகைகளை குறைத்துள்ளன. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஒரு சில ஹாஸ்டல்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படுவதாக சமூக வலைத்தளங்கள் ஒரு சில ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்தும் தனியார் விடுதிகளுக்கு வணிக சிலிண்டர்கள் வழங்க கோரிக்கை விடுத்து கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேசன் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து பேட்டியளித்த அசோசியேஷன் தலைவர் அனந்தராமன் ஹாஸ்டல் மூடப்படும் என்று ஒரு சில ஊடகங்கள் கூறுவதாகவும் ஆனால் அது ஒருபோதும் கிடையாது என்றார். தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த சூழல் ஒரு சிரமத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் விறகு அடுப்புகளை கொண்டு சமையல் செய்து வருவதாகவும் எனவே உதவி கேட்டு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
எங்கள் விடுதிகள் கோவை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இயங்கி வருவதாகவும் அங்கு 1 லட்சம் பேர் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு கமர்சியல் சிலிண்டர் அரசு வழங்குவதாக சில தகவல்கள் வெளியாகிறது எனவே அந்த கமர்சியல் சிலிண்டர்களை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஹாஸ்டல்கள் மூடப்படும் என்று ஊடகங்களில் வரும் செய்தியை அப்படியே நம்ப வேண்டாம் என்றும் தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த சூழல் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.

