கோவை: தர்பூசணி பழங்கள் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், நிறமேற்றப்பட்ட தர்பூசணி பழங்கள் குறித்து தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாகவும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தர்பூசணி பழங்களில் நிறமேற்றப்படுவதாகவும், இது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்றும் சமீபத்தில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அறிவித்தது.
இதனால், தர்பூசணி பழங்கள் குறித்து மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதனால் அதன் விலை வீழ்ச்சியைச் சந்தித்தது. இது விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்தது.
Advertisement


பொதுமக்கள் தர்பூசணி பழங்கள் வாங்குவதைக் குறைத்துவிட்டதால், அதன் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எல்லா விவசாயிகளும் தர்பூசணி பழங்களில் நிறம் ஏற்றுவதாக நாங்கள் கூறவே இல்லை. சிலர் வணிக நோக்கத்திற்காக செயல்படுகின்றனர். அவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மக்கள் யாரும் இது குறித்து அச்சப்பட வேண்டாம்.
கோவையில் தர்பூசணி பழம் உடலுக்கு நல்லது. பொதுமக்கள் இதனை அச்சமின்றி சாப்பிடலாம். நிறமேற்றி தர்பூசணி பழங்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.
எப்படி கண்டறிவது?

பொதுமக்கள் தர்பூசணி பழங்களை வாங்கும் போது அதனை அறுத்து, வெள்ளை நிற டிஷ்யூ பேப்பரில் பழத்தின் மீது ஒத்தி எடுங்கள். அதில் அதிக நிறம் பிடித்தால் அது நிறமேற்றப்பட்ட பழம். குறைவான நிறம் மட்டுமே டிஷ்யூ பேப்பரில் படிந்தால் அது நல்ல பழம்.
இவ்வாறு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி கூறினார்.
