Kovai kutralam: தொழில் நகரமான கோவையில் பொழுதுபோக்கு இடங்கள் என்று சில இடங்கள் இருந்தாலும், முக்கியமான ஒரு சுற்றுலாத்தலமாக உள்ளது கோவை குற்றாலம்.
சூழல் சுற்றுலா பகுதியாகவும், கோவை மக்களுக்கு பிடித்த இடமாக இருப்பது இந்த கோவை குற்றாலம் தான். குறிப்பாக சொல்லப்போனால், தென் மாவட்ட மக்களுக்கு குற்றாலம் என்றால், கோவை மக்களுக்கு கோவை குற்றாலம் தான் சொர்க்கபுரியாகும்.
விடுமுறை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில், கோவை மட்டுமல்லாது, பிற மாவட்ட மற்றும் மாநில மக்களும் இங்கு வருகை புரிந்து மகிழ்கின்றனர்.
Advertisement


கோவை மாநகரின் மேற்குப் பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில், சிறுவாணி அடிவாரத்தில் கோவை குற்றாலம் அருவி அமைந்துள்ளது. சிறுவாணி அருவி என்று அழைக்கப்படும் இந்த கோவை குற்றாலம், நொய்யல் ஆற்றை உருவாக்கும் சிறு ஆறுகளில் ஒன்றான பெரியாற்றில் அமைந்துள்ளது.
இயற்கை எழிலுக்கும், குளிர்ச்சியான நீரோட்டத்திற்கும் புகழ்பெற்ற கோவை குற்றாலம் அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவை குற்றாலம் கட்டணம்

இந்த அருவியில் குளித்து மகிழ பெரியவர்களுக்கு ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.25 என்ற கட்டணத்தை வனத்துறை வசூலிக்கிறது. பார்க்கிங் கட்டணமாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20, பேருந்துகளுக்கு ரூ.100, கார் மற்றும் வேன்களுக்கு ரூ.50 என்ற கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
இது சூழல் சுற்றுலாப்பகுதி என்பதால் நுழைவுப் பகுதியிலிருந்து வனத்துறையினர் இயக்கும் வாகனத்தில் தான் அருவி இருக்கும் இடத்திற்குச் செல்ல முடியும். வனத்துறை அமைத்துள்ள செக்போஸ்டில் இருந்து 3 கி.மீ தூரத்திற்கு வனத்துறை வாகனம் நம்மை அருவியை நோக்கி அழைத்துச் செல்லும்.

அருவியிலிருந்து ஒன்றரை கி.மீ தூரத்தில் அந்த வாகனம் நின்றுவிடும். அங்கிருந்து இயற்கை சூழ் வனப்பகுதியில் நடந்து சென்றால், சில்லென்ற சீதோஷன நிலையை அனுபவிக்கலாம். அதோடு, அருவியில் குளித்து மகிழலாம்.

கோவை குற்றாலம் நேரம்
திங்கட்கிழமையைத் தவிர்த்து மற்ற நாட்களில் கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதியுண்டு. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருவிக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு மேல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. மீறி குளிப்பவர்களை வனக்காவலர்கள் வெளியேற்றுவர்.
இங்கு குளிக்கும் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. கோவை குற்றாலத்திற்கு நடந்து செல்லும் வழியில் உள்ள தொங்கு பாலம் தற்போது சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்து, ஜிப் லைன் உள்ளிட்ட விளையாட்டுகளும் சேர்க்கப்பட உள்ளன.

எப்படிச் செல்வது?
கோவையில் இருந்து சிறுவாணி மற்றும் சாடிவயல் செல்லும் பேருந்துகள் மூலம் இந்த அருவிக்குச் செல்லலாம்.
உக்கடத்திலிருந்து புறப்பட்டால், பேரூர் பைபாஸ், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மாதம்பட்டி, ஆலாந்துறை, காருண்யா நகர் வழியாக 30 கி.மீ தூரம் பயணித்து கோவை குற்றாலத்தை அடையலாம்.
காந்திபுரத்திலிருந்து பயணித்தால் 35 கி.மீ தொலைவு பயணித்து அடைந்துவிட முடியும்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் குழந்தைகளோடு பட்ஜெட் டூர் செல்ல நினைப்பவர்களுக்கு கோவை குற்றாலம் ஏற்ற இடம். இதுவரை நம் ஊரிலுள்ள சூழல் சுற்றுலாவை அனுபவிக்கவில்லை என்றால், இந்தமுறை முயன்று பார்க்கலாம்.