கோவை சாலையில் திடீர் பள்ளம்; இதுதான் ரோடு போடும் லட்சணமா?

கோவை: கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காகவும், சூயஸ் குடிநீர் திட்டத்திற்காகவும் சாலைகள் தோண்டப்பட்டன.

அவ்வாறு தோண்டப்பட்ட சாலைகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் மட்டும் தோண்டப்பட்ட சாலையை மண் கொண்டு மூடி அப்படியே விட்டுள்ளனர்.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சமீபத்தில் திருச்சி சாலையில், இதுபோன்று புனரமைக்கப்படாத ரோட்டில் அரசு பேருந்து ஒன்றும் சிக்கிக்கொண்டது.

இந்த நிலையில் சிங்காநல்லூரை அடுத்த உப்பிலிபாளையம் பெர்க்ஸ் பள்ளி சாலை பாதாள சாக்கடை பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த சாலையில் தார் சாலை அமைக்கப்பட்டது. அப்படி அமைக்கப்பட்ட புத்தம் புதிய தார் சாலை, கடந்த ஒரு வாரம் பெய்த மழைக்கே சேதமடைந்துள்ளது.

சாலையின் நடுவே திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி பணியாளர்கள் அந்தப் பள்ளத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு பணிகளுக்காக கோவையில் தோண்டப்படும் சாலைகள் முறையாக புனரமைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், புதிய சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது அப்பகுதி மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

அவ்வழியாகச் செல்லும் பலரும், “இதுதான் ரோடு போடும் லட்சணமா? தரமாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் தான் இப்படிப்பட்ட சாலைகளை அமைத்து விடுகின்றனர்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp