கோவை: கௌசிகா நீர் கரங்கள், சின்னவேடம்பட்டி ஏறிப் பாதுகாப்பு அமைப்பு கௌசிகா நதியின் ராஜவாய்க்காலை தூர்வாரும் பணியை
பூமி பூஜையுடன் துவக்கினர்.
கோவை மாநகரின் முக்கியமான நீர் ஆதாரங்களின் ஒன்றான கௌசிகா நதியின் ராஜவாய்க்காலை தூர்வாரும் பணி பூமி பூஜையுடன் இன்று துவக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தின் கணுவாயில் இருந்து சின்னவேடம்பட்டி ஏறி வரை சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் செல்லும் கௌசிகா நதியின் முக்கிய வாய்க்காலாக விளங்கும் ராஜவாய்க்காலை தூர் வாரும் பணி, கௌசிகா நீர் கரங்கள் மற்றும் சின்ன வேடம் பட்டி ஏறிப் பாதுகாப்பு அமைப்பு, தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கிறது..
ஒரு காலத்தில் கோவை மக்களின் குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்பட்ட இந்த ராஜவாய்க்கால், பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் வறண்டு கிடந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் இந்த நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக கௌசிகா நீர் கரங்கள் மற்றும் சின்ன வேடம் பட்டி ஏறி பாதுகாப்பு அமைப்பு மற்றும் தன்னால்வர்களுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டது. வருடத்திற்கு ஒருமுறை இந்த வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
இதன் பலனாக கடந்த சில ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில், 30 ஆண்டுகள் கழித்து இந்த வாய்க்காலில் நீர் வடிந்து ஓடியது.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான தூர்வாரும் பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கியது. அபெக்சான் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடைபெறும் இந்த பணிகளை நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கௌசிகா நதி நீர் கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த ராஜவாய்காலை தூர் வாருவதான் மூலம் நகரின் நிலத்தடி நீர்மட்டம் வெகுமாக உயரும் மற்றும் பல லட்சம் லிட்டர் நீர்த்தேக்க கூடிய சின்னவேடம்பட்டி ஏரியில் நீர் நிரம்பினால் நகரின் குடிநீர் பிரச்சனை தீர வழி வகுக்கும். தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து செய்யும் இத்தகைய காரியங்களுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தனியார் நிறுவன ஊழியர்கள் ராஜவாய்க்கால் கரையில் இருக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இந்நிகழ்ச்சியில்,கௌசிகா நீர் கரங்கள் அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் செல்வராஜ், மற்றும் தனியார் நிறுவனத்தின் தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

