கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பு பயிற்சி மூலம் தமிழக பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
புது தில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் தேனீக்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கையாளர்கள் பற்றிய அகில இந்திய ஆராய்ச்சி திட்டத்தில் பழங்குடியின மேம்பாட்டுத் துணைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிர் மகரந்தச் சேர்க்கை மூலம் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் முக்கிய பகுதியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனர் முனைவர் சாந்தி. முருகன் மற்றும் பூச்சியியல் துறை பேராசிரியர் வழிகாட்டுதலின்படி கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகிலுள்ள செங்குட்டை பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 40 பயனாளிகளுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பூச்சியியல் துறை சார்பில் சிறப்பு அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் முக்கிய அம்சங்களாக தேனீ இனங்களை அடையாளம் காணுதல், இந்தியத் தேனீக்களின் பண்புகளைக் கண்டறிதல், இயற்கை வன மூலங்களிலிருந்து தேனீக்களைப் பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கும் முறைகள் விளக்கமளிக்கப்பட்டது.
பூச்சியியல் துறை பருவகால மேலாண்மை தேனீக் குடும்ப பராமரிப்பு மற்றும் பூச்சிநோய்க் கட்டுப்பாட்டு குறித்தும், சுகாதாரமான முறையில் தேன் எடுப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள், இந்தியத் தேனீ கூட்டங்களை கையாளும் முறை மற்றும் தேன் இணைத்தல்,பிரித்தல் .தேனீப் பெட்டிகளை பராமரித்தல், பிரித்தெடுத்தல் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் தேனீ வளர்க்கத் தேவையான பெட்டிகள் கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளன. இப்பெட்டிகளுடன் அந்தப் பகுதிச் சூழலுக்கு ஏற்ற, எளிதில் வளர்க்கக்கூடிய இந்தியத் தேனீக்களும் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் மூலம் நிலையான தொடக்கத்தை உறுதி செய்யும் வகையில் தேனீ வளர்ப்பை ஆரம்பிக்கும்போதே தேனீக்களுடன் கூடிய பெட்டிகள் வழங்கப்படுவதால், பங்கேற்பாளர்கள் எவ்விதத் தடங்கலுமின்றி உடனடியாகப் பணியைத் தொடங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

