கோவை: கோவை நீதிமன்றம் வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கோவை நீதிமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த சோதனையில் அது புரளி என்று தெரியவந்தது.
இந்த நிலையில் இன்றும் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி பாதுகாப்பு மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ந்இந்த தகவல் கோவை ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
உடனே அங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் போலிசார் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை செய்தனர். இலவச சட்ட உதவி பாதுகாப்பு மையத்தில் உள்ள ஒவ்வொரு அறை மற்றும் ஊழியர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், ஆவணங்கள் இருந்த பகுதிகள் என அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு போலீசார் கருவி மூலம் சோதனை செய்தனர்.
ஆனால் நீண்ட சோதனைக்கு பிறகு இந்த வெடிகுண்டு மிரட்டலும் புரளி என்று தெரியவந்தது. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அலுவலர்கள் நிம்மதி அடைந்தனர்.

