கோவை: வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் கோவை உள்ளிட்ட நகரங்களில் தொழில் நடத்த முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் சேவை மையம் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் என்ற திட்டத்தின் கீழ், பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடத்தப்படுவதாக தெரிவித்தார். கோவை மாவட்டம் அதிக தொழில் வாய்ப்புகளை தரும் மாவட்டம் என்றும் பெண்கள் தொழில் துவங்க மற்ற இடங்களை விட உகந்த இடமாக கோவை மாவட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார். பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பது தான் எங்கள் குறிக்கோள் என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசு திட்டங்கள் மூலம் பெண் தொழில் முனைவோர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாரத் மாதா கி ஜெ என அமைச்சர் சேகர்பாபு முன்பு சிலர் முழக்கமிட்டது தொடர்பான கேள்விக்கு பாரத் மாதா கி ஜெய் என்றால் பாரத அன்னையை வணங்குவோம் என்று அர்த்தம் என்றும் இதில் மதவெறி வரவில்லை என்றும் குறிப்பிட்ட அவர் பாரத் மாதா கி ஜெ என நாட்டிற்காக போராடிய லட்சக்கணக்கான தொண்டர்களை கெச்சைப்படுத்த அமைச்சர் சேகர்பாபு நினைக்கிறார் என்றார். மேலும் பாரத மாதா கி ஜெ என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் கோஷம் அல்ல என்றும் அது திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் கோஷமும் கூட தான் அதற்காக காங்கிரஸ் கட்சியை திமுக கண்டிக்குமா? என கேள்வி எழுப்பினார். அமைச்சர் சேகர் பாபுவின் குறுகிய எண்ணம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் வார்த்தையாக வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நம் மாநிலத்தின் அப்பா என்ற முதலமைச்சர் தனது பொறுப்பை விட்டால் எப்படி? முதலமைச்சர் தன் பொறுப்பை மத்திய அரசு, பெற்றோர்கள் மீது போட்டு தப்பிக்க பார்க்கிறார் என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது, மிக மோசமாக இளைஞர்கள் செல்ல அரசும் ஒரு காரணம் என குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் தனது தோல்வி வெளியே தெரிந்துவிடும் என்பதால் மத்திய அரசு மீது பழி சுமத்துவதாக தெரிவித்தார். போதை பொருளுக்கு அரசு தோல்வி தான் காரணம் மேலும் இதற்கு முதலமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். போதைப் பொருள் தடுப்பிற்கு மாநில போலீஸ் என்ன செய்கிறது என கேள்வி எழுப்பிய அவர் மத்திய ஏஜென்சிகள் தங்களது பணியை செய்து வருகின்றன என்றார்.
வடமாநில தொழிலாளர் பிழைப்பிற்காக இங்கு வந்துள்ளார்கள் என்றும் அவர்கள் இல்லாமல் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் நடத்த முடியாது என்றும் கூறிய அவர் வட மாநில தொழிலாளர் மீது வெறுப்பு ஏற்பட தமிழக அமைச்சர்களின் பேச்சும் ஒரு காரணம் என்றார்.
2024ல் கோவைக்கு வந்த மத்திய நிதியமைச்சர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பல்வேறு திட்டங்கள் வாயிலாக கொடுத்துள்ளதாகவும் அதிக வங்கி கடன் தொகை கோவை மாவட்டத்திற்கு தான் வழங்கப்பட்டது என்றார். பொருத்தமானவர்களுக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது வங்கி கடன் பெற நாங்கள் உதவி செய்து வருகிறோம் என்றார்.
தமிழகம் போராட்ட களமாக மாறி வருவதாகவும் அரசு ஊழியர்களுக்கு எதிர் கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது அளித்த வாக்குறுதி என்ன ஆனது என கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு, அரசு ஊழியர்கள் கிரிமினல் குற்றவாளி போல கையாள்கிறார்கள் என்றார்.
சாதாரண மக்கள் அரசு மீது கோபத்தில் உள்ளார்கள், அரசு ஊழியர்களுக்கு அதைவிட அதிக கோபம் உள்ளது என்றார். கோவை செம்மொழி பூங்காவை இன்னும் பார்க்கவில்லை. அதில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த வாரம் வெளியாக உள்ள ஜனநாயகன், பராசக்தி ஆகிய படங்களில் எந்த படத்தை பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு, இந்த படம் என இல்லை நேரம் இருந்தால், படம் நன்றாக இருப்பதாக கூறினார் அந்த படங்களை பார்க்கலாம் என தெரிவித்தார்.

