கோவை: இலங்கை செம்மணி படுகொலைகளுக்கு நீதி கேட்டு கோவையில் முற்போக்கு இயக்கங்கள்
எலும்புக்கூடுகளுடன் முற்போக்கு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இலங்கையில் யாழ்ப்பாணம் அடுத்த செம்மணி பகுதியில் புதைகுழியில் குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலைகளுக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடத் தமிழர் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து சர்வதேச சமூகம் நீதி விசாரணை செய்து படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.