கோவை: 16வது நாளாக இன்று அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதினாறு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய், அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம் வழங்க வேண்டும்
ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனில் தேர்தல் பணிகளை புறக்கணிக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

