கோவை: குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் 48 மணி நேரம் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். அதில் பலர் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்று உள்ளனர். இந்நிலையில் நாளை கோவை குண்டுவெடிப்பு தினம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பலத்த பாதுகாப்பு
கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் பிரச்சனைக்குரிய பகுதிகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இது தவிர கோவில்கள், ஆலயங்கள் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாளை மாலை இந்து அமைப்புகள் சார்பில் ஆர்.எஸ் புரம் பகுதியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கு இடையே கோவை குண்டுவெடிப்பு தினம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாநகர காவல் துறையினர் உத்தரவிட்டு உள்ளனர்.
டிரோன்கள் பறக்கத் தடை
ஏற்கனவே டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், நேரு நகர், ராமநாதபுரம், லட்சுமி மில்ஸ், ரேஸ் கோர்ஸ், காந்திபுரம், செல்வபுரம், சாய்பாபா காலனி, வீரகேரளம், வடவள்ளி மற்றும் முக்கிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
பிப்ரவரி 25ம் தேதி இரவு 10 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். அதையும் மீறி டிரோன்கள் பறக்க விட்டால் கட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

