கோவை: காங்கிரஸ் கட்சியை ஃபெவிகால் சேர்த்து ஒட்டி நடத்துகிறார்கள் என்று கோவையில் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு அண்ணாமலை கூறியதாவது:–
“வேட்டை நாயுடன் சண்டை போடுவேன், அதே சமயம் வேட்டை நாய் பிடிக்கக்கூடிய முயலுடனும் நண்பராக இருப்பேன்” என்ற பழமொழியை போன்று தான் அது.
மணிசங்கர் அய்யர், மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி செல்வப் பெருந்தகை என்று நான்கு பேரின் நிலைகளையும் பார்க்கும் பொழுது இது காங்கிரஸ் கட்சியை இல்லை, 10 பேர் ஃபெவிகால் சேர்த்து ஒட்டி இந்த கட்சியை நடத்துகிறார்கள் என்பது போன்று தான் இருக்கிறது.
அவர்கள் என்னதான் தனியாக குதித்தாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆட்சிக்கு வந்தால் தானே அதிகாரப் பகிர்வு இருக்கும். எனவே காங்கிரஸ் கட்சியினர் வீட்டில் அமைதியாக இருந்து சண்டை போடாமல் இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஜோதிமணி மீது 1008 கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பாராளுமன்றத்தில் அவர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையதாக இல்லை. என்றாலும் கூட தனி மாநில விமர்சனத்தை யாராக இருந்தாலும் வைப்பது ஏற்புடையது அல்ல.
நயினாருக்கு அட்வைஸ்
ஆரோக்கியமான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்று என் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.
நயினார் நாகேந்திரன் திரிஷா பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். அத்துடன் அந்த விஷயம் முடிந்து விட்டது. அரசியலில் நாம் செய்வது எதிர்கட்சியினருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் செய்வது நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதற்காக நாம் விமர்சிக்கும் பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தையின் கணம் என்று ஒன்று உள்ளது.
நாம் பேசும் பொழுது சமூக வலைத்தளங்கள் பத்திரிகை செய்திகளில் உடனே வெளியாகிறது. எனவே அவ்வாறு பேசக்கூடாது என்பது தான் என்னுடைய கருத்து.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

