கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்ற அவசர மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் வாக்குவாதம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் அவசர மாமன்ற கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவிற்கு இரங்கல் தெரிவிக்கபட்டது.
தொடர்ந்து 143 தீர்மானங்கள் இந்த மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதாக மேயர் ரங்கநாயகி அறிவித்தார். எந்த விவாதமும் இன்றி 143 தீர்மானங்கள் நிறைவேற்றபடுவதாக கூறிய மாநகராட்சி மேயரின் அறிவிப்பிற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுடன் திமுக , காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்களும் கடுமையாக வாக்குவாதம் செய்ததால், மாநகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதனையடுத்து மாநாகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா ,ரமேஷ் 3 பேரும் வெளிநடப்பு செய்தனர். மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மாநகராட்சியில் இருந்து 144 சப்ஜெக்ட் கொடுத்தார்கள், கவுன்சிலர்கள் யாரும் அதை படித்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள் என தெரிவித்தார்.
இன்று பல கோடி மதிப்புடைய சப்ஜெக்ட் கொண்டு வந்து இருக்கின்றனர். கமிஷன் வாங்குவதற்காகவே மாநகராட்சியில் சாலை போடுகின்றனர் என தெரிவித்தார். ரோடு போடுவதற்கு பதிலாக பெயின்ட் அடித்து கொண்டு இருக்கின்றனர். இது தேர்தல் வரை தாங்குமா என தெரியவில்லை எனவும் கூறினார்.
ரவுண்டானா ஸ்பான்சர்கள் மூலம் கட்டலாம், ஆனால் இதற்கு மாநகராட்சியில் இருந்து பல லட்சம் செலவு செய்கின்றனர், கமிஷனுக்காக இந்த தீர்மானங்களை கொண்டு வருகின்றனர்.
சட்டமன்றத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு, மே மாதம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த டெண்டர்கள் விசாரணைக்கு உட்படுத்தபடும் என்றார்.

