கோவை: 20ம் தேதி தவறாமல் உலகத் தாய்மொழி தினத்தை கடைபிடிக்க கோவை ஆட்சியர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளன்று அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் உலகத் தாய்மொழிநாள் உறுதிமொழி ஏற்குமாறு அரசு ஆணையிட்டுள்ளது.
அதனடிப்படையில், 2026 பிப்ரவரி 21ஆம் நாளன்று தாய்மொழி நாள் கொண்டாடப்படவுள்ளதையடுத்து 21ம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் 20ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தாய்மொழி தினத்தைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கவும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அதேநாளில் அவரவர் அலுவலகங்களிலும் கல்லூரிகள் / பள்ளிகளில் மாணவர்கள் முன்னிலையிலும் தவிறாமல் உறுதிமொழி ஏற்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களும் தாய்மொழி தினத்தில் தங்கள் தாய்மொழியின் பெருமைகளை உலகறியச் செய்யும் நற்செயல்களில் ஈடுபடலாம்.

