கோவை: பொதுமக்களுக்கு கூடுதல் சேவை வழங்கும் வகையில் Whatsapp Chat Bot சேவையை மாவட்ட காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
கோவை மாவட்ட காவல்துறை சார்பில் “Kovai Digi Cop” என்ற Whatsapp Chat Bot என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதனை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சரவணசுந்தர், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.
98400 91100 என்ற எண் மூலம் Whatsapp ChatBot சேவையை பெறலாம். இதில் ஆன்லைன் புகார் , சைபர்கிரைம் புகார் , புகாரின் விசாரணை நிலைகள், அருகில் உள்ள காவல் நிலையங்கள், இரவு நேர ரோந்து காவலர்களின் விவரங்கள், போதை பொருள் பயன்பாடு குறித்த தகவல்களை காவல்துறையினருக்கு தெரிவிப்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவித்தல் புகார் அளித்தல், எமர்ஜென்சி சேவை எண்கள், வாகனங்களின் விவரங்கள், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம். இதனை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரிவாக விளக்கினார்.
இது குறித்து பேட்டியளித்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இந்த ChatBot மூலம் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்கள் அவர்களுடைய சந்தேகங்கள் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்பொழுது மாவட்ட காவல் துறை எல்லைகளில் மட்டும் இதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூடிய விரைவில் மாநகருக்கும் விரிவு படுத்த இருப்பதாக தெரிவித்தார். மேலும் இதற்காகவே கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிலிண்டர்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யபடுகிறதா என அறிவதற்கு ஸ்பெஷல் பிரான்ச் மூலம் தகவல்களை திரட்டி வருவதாகவும் அவ்வாறு குற்றங்கள் நேர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

