கோவை: கோவையில் மதுபாட்டிலில் ஒட்ட 10 ரூபாய் ஸ்டிக்கர் தராதவர் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை திரும்ப கொடுத்து பணம் பெறும் நடைமுறை சில கடைகளில் உள்ளது. இதற்காக பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு குடிமகனும் மதுபாட்டில் வாங்கும்போது 10 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். பிறகு மது குடித்துவிட்டு காலி பாட்டிலைக் கொடுத்தால் அந்த 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும். இப்படிப்பட்ட நவீன நடைமுறை தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோவைப்புதூர் அம்பேத்கர் சதுக்கத்தை சேந்த விமல்குமார்(29) என்பவர், கோணவாய்க்கால்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு வேலைக்குச் சென்றார்.
பாட்டிலுக்கு பத்து ரூவா
அப்போது அங்கு வந்த 2 பேர் தாங்கள் வேறு கடையில் வாங்கிய மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. எனவே நாங்கள் வாங்கிய மதுபாட்டிலில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை கிழித்து தருமாறு விமல்குமாரிடம் கேட்டனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறானது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இருவரும் மது பாட்டிலை உடைத்து விமல்குமாரை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அவரை மிரட்டிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த விமல்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், விமல்குமாரைத் தாக்கியது வெள்ளலூரைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (30) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டாஸ்மாக் கடைகளில் இஷ்டத்திற்கு மது குடித்துவிட்டு, ‘குடி’மகன்களால் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் போதாதென, இப்படி ஒரு நடைமுறை மூலம், எரியும் விளக்கில் எண்ணெய்யை ஊற்றியுள்ள அரசைப் பார்க்கும்போது, தவெக தலைவர் விஜய் பாடிய பாடல் தான் நியாபத்திற்கு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

