கோவை: கோவை சுங்கம் பகுதியில் வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கொதிக்கும் சாம்பார் உடலில் கொட்டியதில் தீக்காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் (57). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கோவை சுங்கம் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி லலிதா (44) கடந்த 9ம் தேதி தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கொதித்து கொண்டிருந்த சாம்பாரை இறக்கி வைக்க தூக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கொதிக்கும் சாம்பார் அவரின் மீது கொட்டியது.
இதில் அவருக்கு கை, மார்பில் பலத்த தீ காயம் ஏற்பட்டதால் வலியால் துடித்தார்.
இந்த நிலையில் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் லலிதாவை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் நடந்து 10 மேல் ஆகியிருந்தும், அவரது மார்பு பகுதி மற்றும் கை வெந்து போனதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் எவ்வளவோ காப்பாற்ற முயன்றும் பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

