கோவை: கோவையில் தன்னிடம் கடன் வாங்கியவர் இறந்துவிட்டதால், அந்த பணத்தை எண்ணி கவலையடைந்த பெண் ஒருவர் தவறான முடிவு எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் பேபி ( வயது 51). இவர் அந்த பகுதியில் சீட்டு நடத்தி வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 2025ம் ஆண்டு பேபி அவரது உறவினர் ஒருவருக்கு ரூ. 1.2 கோடியை கொடுத்து உள்ளார்.
அதில் பாதி பணத்தை கடன் வாங்கிய உறவினர் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் மீதி பணத்தை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கிய பேபியின் உறவினர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிலிருந்து பேபி மன உளைச்சலில் இருந்து வந்து உள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் உறவினர் தற்கொலை செய்து கொண்டதால் பேபி சீட்டு போட்ட மற்றவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், தவித்து வந்துள்ளார்.
இதனால் பேபி தனது உறவினர் பெண் ஒருவரிடம் அடிக்கடி தனக்கு வாழ விருப்பமல்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற பேபியை உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பேபி அவரது மகனுக்கு செல் போனில் மிஸ்டு கால் கொடுத்து அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை 7.45 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுந்த பேபியின் மகன் உள்ளே சென்று பார்த்த போது பேபி தூக்கில் தொங்கி கொண்டு கிடப்பதை பார்த்து கதறி அழுதார் . இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

