கோவை: பெங்களூருவில் ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது திருப்பூர் இளம் பெண் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களின் வாகன பேரணி நடைபெற்றது. அவர்கள் சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement

அப்போது கிரிக்கெட் வீரர்களைப் பார்க்க வந்த ரசிகர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றபோது 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களில் திருப்பூரைச் சேர்ந்த இளம் பெண்ணும் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த காமாட்சி (25) என்ற பெண் பெங்களூருவில் ராம மூர்த்தி நகரில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி தாளாளரின் மகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் சிக்கி காமாட்சி பரிதாபமாக உயிரிழந்த சூழலில், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பெற்றோருடன் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியும், மற்றொரு பெண்ணும் நெரிசலில் உயிரிழந்துள்ளனர்.
இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவில் திருப்பூரைச் சேர்ந்த பெண் உயிரிழந்த சம்பவம் கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.