கோவை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. பல லட்சம் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
தொற்றின் தாக்கத்திலிருந்து உலகம் மீண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் உலக அளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது.
Advertisement

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,710ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 227 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

டெல்லி, குஜராத் மற்றும் மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் தலா 100 பேருக்கு மேல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த வாரத்தில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றால் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பொது இடங்களுக்குச் செல்கையில் முகக்கவசம் அணிந்து செல்ல சுகாதாரத்துறை பரிதுரைத்துள்ளது.
கோவையில் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளும், நோயாளிகளில் உறவினர்களும் மாஸ்க் அணிந்து வர மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

இந்த தொற்று பாதிப்பால் முதியவர்கள் உயிரிழந்து வந்த நிலையில் தற்போது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த சூழலில், மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், வெளியில் சென்று வந்த பின்னும், சாப்பிடும் முன்பும் கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சளி தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுதல், சானிடைசர்கள் உபயோகப்படுத்தி அவ்வப்போது சுகாதாரமான வாழ்வியலை உறுதி செய்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தற்போது முதலே தொடங்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொற்று பாதிப்பு பரவல் அதிகமாகும் முன்பு, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, வரும் முன் காப்பதே சிறந்தது.
பொது நலனுடன்,
நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர்