கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
கோவை கணபதி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் 1989ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்காக 18 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தியது. அதற்குரிய இழப்பீடு தொகையில் ஒரு பங்கு மட்டுமே வழங்கிய நிலையில் 1 கோடியே 83 லட்சம் ரூபாய் பணத்தை வழங்காமல் இருந்துள்ளது.
இது சம்பந்தமாக சில வருடங்களுக்கு முன்பு ராமசாமியின் வாரிசுகளான சுந்தர்ராஜ், ஜானகி அம்மாள், மாணிக்கம் ஆகியோர் கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி, இழப்பீட்டுத் தொகைக்கு ஈடாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற ஊழியர்கள் காவல்துறை பாதுகாப்புடன் ஜப்தி செய்ய வந்தனர். அவர்களுடன் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலை முதல் மாலை வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனிடையே அரசு தரப்பில் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகையை தருவதாக மனுதாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.