கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவையில் உள்ள துணிக்கடைகளில் மக்கள் ஏராளமானோர் புத்தாடைகளை வாங்கி செல்கின்றனர்.
வருகின்ற 20ம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. அதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் பொதுமக்கள் பலரும் புத்தாடைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவையை பொறுத்தவரை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, பிரகாசம், காந்திபுரம் கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் ஏராளமான துணிக்கடைகள் உள்ளதால் அதிகளவு மக்கள் வருகை புரிந்து புத்தாடைகளை வாங்கி செல்கின்றனர். சாலையோர கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

அதிகளவு பொதுமக்கள் வருகையால் சாலைகளின் இரு புறங்களிலும் பேரிகேட்டுகளை அமைக்கப்பட்டு பொதுமக்களை அதற்குள் நடந்து செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் குழந்தைகளையும், உடைமைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி தொடர்ந்து ஒலிபெருக்கிகள் மூலம் போலிசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதிக அளவிலான பொதுமக்கள் தொடர்ந்து வருகை புரிவதால் டவுன்ஹால் காந்திபுரம் கிராஸ்கட் சாலை ஆகிய முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவல்துறையினர் சீர் செய்து வருகின்றனர்.


