கோவை: உக்கடம் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
உக்கடத்தை அடுத்த புல்லுக்காடு பகுதியில் சோலார் பிளான்ட் அருகே 24 மணி நேர குடிநீர் (சூயஸ்) திட்டத்திற்காக பிரம்மாண்ட தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த தொட்டியின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அருகில் கொட்டப்பட்டிருந்தன. இன்று மதியம் அந்த குவியலில் திடீரென தீ பற்றியது.
Advertisement

பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் முன், தீ மளமளவெனப் பரவியது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்த தீ விபத்தால் பரவிய புகையால் புல்லுக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் வந்த நிலையில், கூடுதல் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இதனிடையே விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.