கோவை: இலவச பேருந்து பயணம் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை, வடவள்ளியில் நடைபெற்ற ‘மோடி முகாம்’ நிகழ்ச்சியில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நூற்றுக் கணக்கான நலத் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருவதாகவும், குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், அந்த திட்டங்களை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த மாநில அரசு முன்வரவில்லை என குற்றம் சாட்டினார்.
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுவதாக கூறிய அவர், பிரதமர் அறிவிக்கும் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்றால் மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றார். ஏழை மக்களின் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பல நலத் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த முன்வரவில்லை என குற்றம்சாட்டிய அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவை மக்கள் சேவை மையம் மூலம் 3 ஆயிரம் பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 200 பெண்களுக்கு இன்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தையல் இயந்திரங்கள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.
7 வயது முதல் 70 வயது வரை பெண்கள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக கூறிய அவர், சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டு உள்ளதாக விமர்சித்தார்.இலவச பேருந்து திட்டம் குறித்து பேசுகையில், அது முழுமையாக செயல்படவில்லை என்றும், மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், மக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் மறுபுறம் டாஸ்மாக் மூலம் மீட்கப்படுகின்றன என்றும் விமர்சித்தார். வர இருக்கும் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து தற்போதைய தி.மு.க அரசை மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முகாமினை துவக்கு வைத்தார். மேலும் கூட்டணி கட்சியினரும் இந்த முகாமில் பங்கேற்றனர்.

