கோவை: விஜய்க்கு தமிழக மக்களிடம் இணைப்பு உள்ளது என்றால் எங்களுக்கு எத்தனை இணைப்பு மக்களிடம் இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கோவை, திருப்பூர் நகரங்களின் அடையாளம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது சிலர் புதிதாக வந்து “மஞ்சள் நகரம்” என்று கூறுகிறார்கள். அமைத்தது பாஜக அரசு என தெரிவித்தார். பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போராட்டத்தில் பூரண சந்திரன் தனது உடலில் தீயை ஏற்றிக் கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தமிழக முதல்வர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். துப்புரவு தொழிலாளர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்சனை அல்ல; அது ஈகோ பிரச்சனை.
இந்த விவகாரத்தில் நீதிபதியையே குற்றம் சாட்டுவது தவறான போக்கு. திருப்பரங்குன்றம் தூண் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. முருகன் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக சிலர் பேசுகிறார்கள்; அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து பெண்ணாக நான் பேச முடியாது என்றார்.
விஜய் 10 வயதிலிருந்து மக்களுடன் இணைப்பு இருப்பதாக கூறினால், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவை செய்துள்ள எங்களுக்கு எந்த அளவிற்கு மக்களுடன் இணைப்பு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.
தி.மு.க மகாத்மா காந்தியை உரிய முறையில் கொண்டாடவில்லை. அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றவில்லை. மகாத்மா காந்தி ஊழல் அற்றவர்; ஆனால் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. காந்திக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
முற்போக்கு இயக்கங்கள் என்ற பெயரை மாற்றி, அவை பிற்போக்கு இயக்கங்கள் என சொல்ல வேண்டும். சரஸ்வதி நாகரிகம் வரலாற்றில் உள்ளது. அ.தி.மு.க அமைச்சர்கள் பா.ஜ.க தலைவர்களை சந்திப்பது நட்பின் அடையாளமே வேறு பிரச்சனை என்பது கிடையாது என தெரிவித்தார்.
அமலாக்கத்துறை சோதனைகளில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது தேர்தல் நேரம் என்பதால் வழக்குகள் போடப்படவில்லை என்றாலும், அவை எப்போதும் தொடரும். உதயநிதிக்கு புரிகிறதா இல்லையா என்பது தெரியவில்லை; எழுதித் தருபவர்கள் எதுகை, மோனையுடன் எழுதித் தருகிறார்கள் என்றார்.
கருணாநிதி பெயரை அனைத்திற்கும் வைத்துள்ளனர்; சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்கலாம். “தீயசக்தி தி.மு.க” என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தை. நான் அனைத்து மதங்களுக்கும் ஆதரவாக பேசுவேன்; ஆனால் பைபிளை பாராட்டி பகவத் கீதையை எதிர்ப்பது தவறு என அவர் தெரிவித்தார்.

