பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு உத்தரவின் பேரில், வாக்கு சேகரிக்கும் இயந்திரங்கள் (EVM), VVPAT மற்றும் இந்திய தேர்தல் நடைமுறையின் நேர்மைத்தன்மை குறித்து பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு, எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்த “வாக்கு திருட்டு” மற்றும் வாக்கு சேகரிக்கும் இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியுள்ளது.
“மக்களவைத் தேர்தல் 2024 – குடிமக்களின் அறிவு, மனப்பாங்கு மற்றும் நடைமுறை (KAP) இறுதி ஆய்வு” என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் செயல்படுத்திய Systematic Voters’ Education and Electoral Participation (SVEEP) திட்டத்தின் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூர், பெலகாவி மற்றும் கலபுரகி ஆகிய நான்கு பகுதிகளில் இருந்து 5,001 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டசபைத் தொகுதிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டு, வயது, பாலினம் மற்றும் சமூகப் பிரிவுகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
ஆய்வு முடிவுகள்
கர்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, வாக்கு சேகரிக்கும் இயந்திரங்களின் துல்லியத்தன்மை மீது பொதுமக்கள் நம்பிக்கை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

மொத்தமாக 83.61 சதவீதம் பேர், வாக்கு சேகரிக்கும் இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குகின்றன என்று ஒப்புக் கொண்டுள்ளனர். இதில் கலபுரகி பகுதி மிக உயர்ந்த நம்பிக்கையுடன் 94.48 சதவீத ஒப்புதலைப் பெற்றுள்ளது.
அதேபோல், இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுகின்றன என்ற பொதுமக்களின் நம்பிக்கையும் அனைத்து பகுதிகளிலும் உறுதியானதாக உள்ளது. மொத்தமாக 84.55 சதவீதம் பேர் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுகின்றன என்று நம்புகின்றனர். இதில் கலபுரகி பகுதி 94.86 சதவீத ஒப்புதலுடன் முதலிடத்தில் உள்ளது.
VVPAT குறித்து பொதுமக்களிடையே பரவலான விழிப்புணர்வு இருப்பதும் இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. மொத்தமாக 85.39 சதவீதம் பேர் VVPAT குறித்து அறிவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். வாக்களிக்கும் போது, 65.39 சதவீதம் பேர் தாங்களே நேரில் VVPAT பார்த்ததாக கூறியுள்ளனர். கலபுரகி பகுதியில் மட்டும் 82.48 சதவீதம் பேர் வாக்களிக்கும் நேரத்தில் VVPAT பார்த்துள்ளனர்.
வாக்கு சேகரிக்கும் இயந்திரம் மீது நம்பிக்கை கொண்டவர்களின் சதவீதம்:-
பெலகாவி, பெங்களூரு, கலபுரகியில், மைசூரில் மொத்தம் 14.22 சதவீதம் பேர் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளனர், நம்பிக்கை உள்ளதாக 69.33 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுகின்றனவா என்ற கேள்விக்கு
பெலகாவி, பெங்களூரு, கலபுரகியில், மைசூரில் மொத்தம் 12.14 சதவீதம் பேர் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளனர், நம்பிக்கை உள்ளதாக 72.41 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
ஓட்டு செலுத்தியதும் VVPAT பேட் பார்த்து உறுதி செய்தவர்கள்:-
பெலகாவி, பெங்களூரு, கலபுரகியில், மைசூரில் மொத்தம் 65.39 சதவீதம் பேர் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளனர், நம்பிக்கை உள்ளதாக 7.61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தின் மகாதேவபுரம் மற்றும் ஆலந்தா சட்டசபைத் தொகுதிகளை மேற்கோள் காட்டி, ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியதோடு, இதை “ஹைட்ரஜன் பாம்” எனவும் கூறினார்.
குற்றச்சாட்டுகள்

ஆனால், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அவரது குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போகச் செய்துள்ளது. AICC தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியும், அவரது மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே பிரதிநிதித்துவம் வகிக்கும் பகுதியும், வாக்கு சேகரிக்கும் இயந்திரங்கள் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
வாக்கு சேகரிக்கும் இயந்திரத்தின் துல்லியம், தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுகின்றன என்ற நம்பிக்கை மற்றும் VVPAT சரிபார்ப்பு குறித்த நேரடி அனுபவம் ஆகிய அனைத்திலும் கலபுரகி பகுதி மக்கள் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மொத்தமாக 91.31 சதவீதம் மக்கள் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுகின்றன என்று நம்பும் நிலையில், “ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டு கர்நாடகத்தில் தவிடுபொடியாகியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், 90.16 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கும் அனுபவம் எளிதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். உண்மையில், 81.39 சதவீதம் பேர் ஒவ்வொரு வாக்கும் மதிப்புடையது என்று நம்புகின்றனர்.
வாக்குச்சாவடி அலுவலர்களின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கிய குற்றச்சாட்டுகளையும் மக்கள் நிராகரித்துள்ளனர். 95 சதவீதம் வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டதாகவும், எந்த அரசியல் அழுத்தமும் இல்லாமல் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.

