கோவை: கமல் தெலுங்கு மொழியை கேவலப்படுத்தி உள்ளதாக நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
நாடாளுமன்றத்தில் கமல் பேசியது புரியாமலயே அவரை சிலர் பாராட்டுகிறார்கள் அவர் பெரியாருக்கான பதிலைதான் கூறுகிறார் மேலும் தெலுங்கு மொழியை கேவலப்பட்டுத்தி உள்ளார் என பாஜக பிரமுகர் கஸ்தூரி கோவை விமான நிலையத்தில் விமர்சித்துள்ளார்
கோவை விமான நிலையத்தில் நடிகையும் அரசியல் செயற்பாட்டாளருமான கஸ்தூரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்துள்ளதாகவும், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் கஸ்தூரி குற்றம்சாட்டினார். கிடைக்காத பாதுகாப்பையும், மோசமான சட்டம்–ஒழுங்கு நிலையும் கண்டித்து தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறினார். கோவையிலேயே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருவதாக குறிப்பிட்ட அவர், திமுக அரசு தமிழ்நாட்டு மக்களை “குடி நோயாளிகளாக” மாற்றி விட்டதாக கடுமையாக விமர்சித்தார். தமிழக அரசே மதுவிற்கு அடிமையாகி விட்டதாகவும், தேர்தல் நெருங்கும் காரணத்தால் பார் லைசென்ஸ்கள் வழங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் நிதி திரட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
முதல்வர் பெண்கள் பாதுகாப்பு என திரும்பப்திரும்ப ஸ்டாலின் ஜெபம் செய்வது போதாது என விமர்சித்த கஸ்தூரி, “இரவு 8 மணிக்கு மேல் முதல்வர் ஸ்டாலினை வாக்கிங் போக சொல்லுங்கள், அப்போது தான் நிலைமை புரியும்” என சாடினார். அரசியல் கூட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.
புதிதாக நடிகர் தொடங்கிய கட்சிக்கே கூட்டம் கூடுவதாகவும், பிரதமர் மோடி மதுராந்தகத்தில் வந்தபோது லட்சக்கணக்கான மக்கள் தானாக கூடியது உண்மையான கூட்டம் எனவும் தெரிவித்தார். ஆனால் ஆளும் கட்சிக்கு கூடும் கூட்டங்கள் எவ்வாறு வருகிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.
கமல்ஹாசன் குறித்து பேசிய அவர், “கமல் பேசுவது புரியாமலேயே சிலர் பாராட்டுகிறார்கள். அவர் தனது உரையை தெலுங்கு மொழியை கேவலப்படுத்தி தொடங்குகிறார்” என விமர்சித்தார். சினிமாவையும் அரசியலையும் குழப்பக் கூடாது என்றும் கூறினார்.
மேலும், மாநாடு தோறும் தவெக தலைவர் விஜய் பேசிவிட்டு அதன் பிறகு அமைதியாகிவிடுகிறார் என்றும், எந்தப் பிரச்சனைக்கும் அவர் குரல் கொடுப்பதில்லை என்றும் கஸ்தூரி விமர்சனம் செய்தார். ஆதவ் அர்ஜூனா பேசும் அளவிற்கு கூட விஜய் பேசுவதில்லை எனவும் கூறினார்.
புதிய கட்சி என்பதால் விருப்ப மனுக்களை ரசிகர்கள் வாங்குவார்கள் என்றும், ஆனால் அவை மனுத்தாக்கல் செய்யப்படுவதுமில்லை, தாக்கல் செய்பவர்கள் போட்டியிடுவதுமில்லை, போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவதுமில்லை எனவும் கஸ்தூரி தனது விமர்சனத்தைத் தெரிவித்தார்.

