Header Top Ad
Header Top Ad

மரம் நடும் விழா மூலம் மரம் தங்கசாமிக்கு அஞ்சலி செலுத்திய காவேரி கூக்குரல்!

கோவை: மரம் தங்கசாமியின் நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகமெங்கும் 65-க்கும் மேற்பட்ட இடங்களில் மரம் நடும் விழாக்கள் நேற்று நடைபெற்றது.

இதன் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி அவர்கள், டிம்பர் மர சாகுபடி குறித்து விவசாயிகள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எண்ணற்ற விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றினார்.

அவர் ஈஷாவின் ஆரம்பகால இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து நீண்ட காலம் பணியாற்றினார்.

Advertisement

அந்த வகையில், அவரது நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள 67 விவசாய நிலங்களில், 434 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 1,04,602 டிம்பர் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இது தவிர, ஈஷா யோக மையம் மற்றும் பேரூர் ஆதீனம் இணைந்து செயல்படுத்தும் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டத்தின்படி, 14 பஞ்சாயத்துகளில் 114 அரச மரங்கள் நடப்பட்டது.

மழைகாலம் துவங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது.

டிம்பர் மரக்கன்றுகள் 5 ரூபாய்க்கும், இதர மரக்கன்றுகள் 10 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மேலும் ஜாதிக்காய், அவகோடா, சர்வசுகந்தி, லவங்கம், மிளகு ஆகிய விலை உயர்ந்த நறுமணப் பயிர் கன்றுகள் குறிப்பிட்ட அளவு இருப்பு உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Recent News