Header Top Ad
Header Top Ad

32 ஆண்டுகளுக்குப்பின் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் திருவிழா கோலாகலம்!

கோவை: கோட்டைமேட்டில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது.

கோவை கோட்டைமேட்டில் அகிலாண்டேஸ்வரி உடனமர், சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவிலில் தைப்பூசம், சித்திரைத் திருவிழா ஆகிய காலங்களில் தேரோட்டம் நடத்தப்படும்.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூசம் தேரோட்டம் நடைபெற்றது.

கடைசியாக இந்தக் கோவிலில் கடந்த 1993ம் ஆண்டு சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 32 ஆண்டுகளாக சித்தரைத் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

Advertisement

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

தொடர்ந்து, கடந்த 4ம் தேதி இந்த கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை வாகனம், கைலாச வாகனம், மூசிய ரிஷப வெள்ளி மயில் வாகனம் ஆகிய வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

நேற்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கெளமார மடாலயம் சிறை ஆதீனம் குமரகுருபர சாமிகள் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், தி.மு.க மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

தேரானது கோவிலிலிருந்து புறப்பட்டு பெருமாள் கோவில், ஒப்பணக்கார வீதி, மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறது.

நாளை மாலை 6.30 மணிக்கு தெப்ப உற்சவம் மற்றும் திருவீதி உலா நடைபெற உள்ளது. வரும் 17ம் தேதி இரவு 8:30 மணிக்கு வசந்த உற்சவம் 15ம் தேதி இரவு 8 மணிக்கு ஊஞ்சல் விளையாட்டு உற்சவம் நடைபெறுகிறது.

Recent News