கோவை: கோவை அருகே முள்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம் மொடமாத்தி சுற்றுக்கு உட்பட்ட போலுவம்பட்டி வனப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார்க்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது.
இந்நிலையில் தோட்டத்திலிருந்து வெளியே வரும் பகுதியில் நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பழைய முள்கம்பி வேலியில் பெண் சிறுத்தை ஒன்று மாட்டி உயிரிழந்துள்ளது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்தனர். உடற்கூராய்வு முடிவுகள் வந்த பிறகு கூடுதல் தகவல்களை வெளியிடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முள்கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியிலும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

