கோவை: தமிழக அளவில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்தில் மூன்றாம் இடம்பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் காவல் நிலையம், தமிழக அளவில் சிறப்பான சேவைக்காக மூன்றாவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இக்காவல் நிலையம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொண்ட விரைவான விசாரணைகள், மனநல ஆலோசனை சேவைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொதுமக்கள் நட்பு காவல் சேவை மற்றும் குற்றவியல் விசாரணைகளில் வெளிப்படுத்திய திறமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இடத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையங்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த விருது, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பணியைப் பிரதிபலிக்கிறது.
மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இந்த சாதனையை பாராட்டி, “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் மனிதநேயத்துடனும், சட்டப்பூர்வமாகவும் செயல்பட்டு சிறப்பிடம் பெற்றுள்ள பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்திலும் இதே உறுதியுடன் பொதுமக்களுக்கு சேவை செய்து மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.

