கோவை: கணக்காயர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்காத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும் என சட்டமன்ற பேரவை பொது கணக்குகள் குழு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பொது கணக்குகள் குழுவினர்களான, அப்துல் சமது, கே ஆர் ஜெயராம், அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி, எஸ் சேகர், சட்டப்பேரவை துணை செயலாளர் பால சீனிவாசன் ஆகியோர் குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

தாவரவியல் பூங்காவில் உள்ள செடி கொடிகள் பற்றியும் தற்பொழுது தாவரவியல் துறையில் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குழுவின் தலைவர் செல்வ பெருந்தகை, இன்று காலை முதல் வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்து வருவதாக தெரிவித்தார். புற்றுநோய் பரிசோதனையில் முதல் மாவட்டமாக கோவை மாவட்டம் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதற்காக மாவட்ட ஆட்சியர்க்கும் நிர்வாகத்தினருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மத்திய மற்றும் மாநில அரசின் வீடு கட்டும் திட்டங்களின் கீழ் பல வீடுகள் அன்றைய காலகட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அது கிராம பஞ்சாயத்துகளுக்கு மட்டும் தான் அனுமதிக்கப்படும் என்று இருந்த நிலை மாறி தற்பொழுது 30 ஆண்டுகளுக்கு முன்பு யாரெல்லாம் வீடு கட்டி பழுதடைந்து இருக்கிறதோ அதை எல்லாம் கட்டித் தரலாம் என்ற சிறப்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதுவும் கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிந்தது மகிழ்ச்சி என்றார்.
இன்னும் திட்டங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்த அவர் நாளைய தினம் நடைபெறக்கூடிய ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொண்டு விவரங்களை தெரிவிப்பதாக தெரிவித்தார்.
ஆய்வுகள் மேற்கொள்ளும் பொழுது குறைகளையும் குற்றங்களையும் கணக்காயர்கள் தொடர்ச்சியாக முன் வைப்பதாகவும் அதனை எல்லாம் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் தீர்க்க வேண்டும் என தெரிவித்தார். எவ்வளவு காலத்திற்கு அதிகாரிகள் தவறு செய்கிறார்கள் என்று கணக்காயர்கள் ஆய்வு செய்து குற்றங்கள் சுமத்தி கொண்டு இருப்பார்கள் என்றும் தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லை என்ற நிலைக்கு மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.