கோவை: மா பயிரை தாக்கும் மாவு பூச்சியில் இருந்து பயிரை காக்கும் மேலாண்மை குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மா பயிரைத் தாக்கும் மாவுப்பூச்சியின் மேலாண்மை குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம். பொள்ளாச்சி வட்டாரத்தில் உள்ள மாம்பழத் தோட்டங்களில், மாவுப்பூச்சி தாக்குதல் சமீப காலமாக பதிவாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இப்பூச்சி தாக்குதல் அதிகரிப்பதால் மாம்பழ மரங்களின் வளர்ச்சி, மலர்தல் மற்றும் காய்ப்புத் திறன் பாதிக்கப்படுவதுடன், மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
மா பயிரைத் தாக்கும் மாவுப்பூச்சி சாறு உறிஞ்சும் வகையைச் சேர்ந்தது. இப்பூச்சிகள் இலைகள், இளம் கிளைகள், பூத்தண்டு மற்றும் வளர்ந்து வரும் பழங்களில் இருந்து சாற்றை உறிஞ்சுவதன் மூலம் பயிரின் வளர்ச்சியை பாதிக்கின்றன. இதன் தாக்குதலால் இலைகள் மஞ்சளாகி உலருதல், பூக்கள் மற்றும் பழங்கள் உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு விளைச்சல் குறைவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும் இப்பூச்சிகள் வெளியிடும் தேனொழுகல் திரவம் காரணமாக கருப்பு பூஞ்சை வளர்ச்சி ஏற்பட்டு இலைகளின் ஒளிச்சேர்க்கை செயல்பாடு குறைகிறது. இதனால் பழத்தின் தரமும் சந்தை மதிப்பும் பாதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில், மாவுப் பூச்சி ஜனவரி தொடக்கத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது முட்டையிடுதல் மற்றும் இளம் பூச்சிகள் வெளிவருவது அதிகரிக்கும். குளிர்காலத்தில் முட்டைகள் மண்ணில் இடப்படுகின்றன. அவை பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முட்டையிலிருந்து வெளிவந்து மரத்தில் ஏறி பரவுகின்றன. இளம் பூச்சிகள் மரத்தின் தண்டு வழியாக மேல் எழுந்து வந்து மென்மையான பகுதிகளை தாக்குகின்றன.
பயிரை தாக்கும் காலம்டிசம்பர் முதல் மே வரை (பூக்கும் காலத்தில் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும்)
இதற்கான மேலாண்மையாக மா பூக்கும் காலத்தில் மரத்தின் அடிப்பகுதியில் (கிளைகள் சந்திக்கும் இடத்திலிருந்து சற்று கீழே) சுமார் 1-1.5 மீட்டர் உயரத்தில் 25-30 செ.மீ அகலத்திற்கு பாலித்தீன் தாளைச் சுற்றி (400 தடிமன் அளவீடு) இடைவெளிகள் இல்லாமல் கட்ட வேண்டும்பாலித்தீன் தாள் மேல்ஒட்டும் எண்ணெய்ப் பசையை தடவ வேண்டும் அல்லது சணல் நூலால் தண்டுகளை சுற்றி கட்டி அதன் கீழ் விளிம்பில், பழ மர கிரீஸை தடவவும். இதனால் பூச்சிகள் மண்ணிலிருந்து மரத்தின் மீது ஏறுவதை தடுக்கும்.
பசையை மீண்டும் 15 நாள் இடைவெளியில் தடவி வைக்கவும். ஜூன்-ஜூலை மாதங்களில் கருங்கன்னி, பார்த்தீனியம் (காங்கிரஸ் களை) போன்ற களைகள் மற்றும் புற்களை அகற்றவும். மே மற்றும் ஜூன் மாதங்களில் மரத்தைச் சுற்றியுள்ள மண்ணை ஆழமாக உழுவதால் மண்ணில் உள்ள முட்டைகள் சூரிய ஒளியில் காய்ந்து அழியும்.
கிரிப்டோலோமஸ் மான்ட்ரோசிரி எனப்படும் இயற்கை எதிரியான வண்டுகளை மரத்திற்கு 10 வீதம் விடுவிக்கலாம். ஆரம்பக் கட்டத்திலேயே பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றுவது மற்றும் மரங்களை முறையாக கண்காணிப்பது அவசியம். தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில், டைமெத்தோயேட் 30 ஈஸி 2 மிலி/லிட்டர் அல்லது ஸ்பைரோடெட்ராமேட் 11.1% இமிடாக்ளோபிரிட் 11.01% எஸ்சி 0.75 மிலி/லிட்டர் ஆகிய பூச்சிக்கொல்லிகளை மரத்தின் அடிப்பகுதி மற்றும் கீழ் கிளைகள் நோக்கி அதிக அளவு தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்
பூச்சிகளின் மீதுள்ள மெழுகு பூச்சு காரணமாக, தெளிக்கும் திரவத்தில் ஒட்டும் திரவம் சேர்ப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

