கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
பணி நேரத்தை பணிகளையும் வரன்முறை படுத்த வேண்டும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை ஆகியவற்றை ஆராய்ந்து மருந்துகளை வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில் இந்த ஊழியர்களுக்கு மாதம் 5500 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நிர்ணயித்த பணிகளை விட பல்வேறு பணிகளை செய்ய அதிகாரிகள் வலியுறுத்துவதாகவும் ஊக்கத்தொகையிலும் துறை சார்ந்த செலவுகள் ஸ்கோர் கார்டு என்ற முறையில் பிடித்தம் செய்யப்படுவதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஊக்கத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் ஐந்து ஆண்டு காலங்களாக பணியாற்றும் ஊழியர்களை திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கி நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும்
பணி நேரத்தையும் பணிகளையும் வரன்முறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர்.
மேலும் இப்போராட்டத்தில் இந்த மக்களை தேடி மருத்துவம் திட்டம் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இரண்டு அரசுகளின் நிதி பங்களிப்புடன் அமலாக்கப்பட்டு இருப்பதால் இரண்டு அரசுகளும் நிதி ஒதுக்கீட்டை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இச்சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

