கோவை: மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் விதமாக கோவையில் இன்று மோடி முகாம் நடைபெற்றது.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக சார்பில் மோடி முகாம் இன்று நடைபெற்றது.
இதில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் மாநிலப் பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே எடுத்துரைத்தனர்.
மேலும், முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டன. தொடர்ந்து, சாலையோர வியாபாரிகளுக்குப் பிரதமர் மோடியின் உருவம் பதித்த நிழற்குடைகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக இந்த முகாமில் வானதி சீனிவாசன் பேசுகையில்:“மத்திய அரசின் இன்சூரன்ஸ் உள்ளிட்ட திட்டங்களைப் பொதுமக்களிடையே கொண்டு செல்லவே திமுக ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றனர்.

இதனாலேயே பொதுமக்கள் பலரும் பிரதமர் மோடியின் நல்ல திட்டங்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். எனவே, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்காத பகுதிகளுக்கும் அந்தத் திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு பகுதியிலும் மோடி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சரானதும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்துச் செல்வோம்” என்றார்.


Enna thitam???ipo kooda solalam….