Header Top Ad
Header Top Ad

ஈரோட்டில் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம் தொடக்கம்!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் “ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாகி வருவதாக ஐ.நா-வின் சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருவதாகவும், இதற்கு எளிமையான தீர்வு மரங்கள் நடுவதே” எனக் கூறினார்.

பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் அரச மரங்களை நடும் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திற்கான திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது.

Advertisement

Single Content Ad

இவ்விழாவில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன், சிவகாசி பசுமை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் மற்றும் காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் இணைந்து முதல் மரக் கன்றினை நட்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தனர்.

இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் இத்திட்டம் குறித்து விளக்கி பேசுகையில், “சத்குரு கடந்த 2004-ஆம் ஆண்டு ‘பசுமை கரங்கள்’ என்ற இயக்கத்தினை துவங்கிய போது ஒரு கிராமத்தில் 5 அரச மரங்களை வைத்து வளர்த்தால் அது மக்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு நல்லது எனக் கூறினார்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் அரச மரங்களை நடுவதை இலக்காக கொண்டு பேரூர் ஆதீனம் 24-ஆவது குரு மகாசன்னிதானம் அவர்களின் நூற்றாண்டு நிறவையொட்டி, தற்போதைய 25-ஆவது ஆதீனத்துடன் இணைந்து “ஒரு கிராமம் அரச மரம்” திட்டத்தினை செயல்படுத்துகிறோம்.

ஐ.நா-வின் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றின் அறிக்கையின் படி, ஒரு நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாகி வருகின்றது. தமிழகத்தில் 50 சதவீத நிலம் தரிசாகி உள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் 2050-இல் உலகில் 90 சதவீத நிலம் விவசாயத்திற்கு பயன்படும் நிலையில் இருக்காது எனக் கூறப்படுகிறது. அதே போன்று அடுத்த 20 வருடங்களில் உணவு உற்பத்தியும் குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படும் எனக் கூறுகிறார்கள். 33 சதவீதம் பசுமை பரப்பு இல்லை என்றால் நாடு பாலைவனம் ஆகும். இதற்கு எல்லாம் மரங்கள் நடுவதே ஒரே தீர்வு.

இதன் காரணமாகவே மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து விவசாய நிலத்தில் மரங்களை நடுவதன் மூலம் மண் வளத்தை அதிகரித்து நதிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு காவேரி கூக்குரல் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் 1.5 கோடி மரக் கன்றுகளை விளைவித்து விவசாயிகளுக்கு மானிய விலையில் காவேரி கூக்குரல் இயக்கம் வழங்கி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பேரூர் ஆதீனம், “நமது கிராமங்களில் அரச மரங்களை நட்டு வளர்த்து பசுமையான சூழலை உருவாக்குவதோடு நம் பண்பாட்டினை மீட்டெடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படும். வெறும் மரக்கன்றுகள் நடுவதோடு நிற்காமல் இதற்காக கிராமங்கள் தோறும் குழுக்களை உருவாக்கி கல்வி கற்க முடியாதவர்களுக்கு உதவுதல், கிராமங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க தேவையான செயல்களை செய்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.” என்றார்.

Recent News

Single Sidebar Ad

Latest Articles