கோவை: கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த சிறுவனை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவரது மகன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு Progressive Familial Intrahepatic Cholestasis Type-3 என்ற அறிய வகை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் ரத்தவாந்தி, வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தார்.
தொடர்ந்து மனோஜ் அவரது மகனை பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், சிறுவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. இதனிடையே பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்களான கிருபாகரன், ஜோசப்ஜான், ரதி, நிரேஷ்குமார் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-
சிறுவனுக்கு அரிய வகை கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்ட உடனேயே எங்கள் மருத்துவக் குழுவினர் அதற்கான சிகிச்சையைத் தொடங்கினர். பொதுவாக பெரியவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சை போல் அல்லாமல் இது சிக்கலான சிகிச்சையாக இருந்தது. பல்துறை மருத்துவர்களின் உதவியுடன் சிறுவனுக்கு நாங்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம்.

அவரது தாயிடம் இருந்து கல்லீரல் தானமாகப் பெற்று அதனை சிறுவனுக்கு பொறுத்தியுள்ளோம். இந்த சிகிச்சைக்கு 18 முதல் 22 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதனை முழுக்க முழுக்க தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் மூலமாக மேற்கொண்டுள்ளோம். தற்போது சிறுவன் நலமுடன் உள்ளார். அவர் சில மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. என்றனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறியதாவது:-
எனது மகன் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு ஆளானான். அவனுடைய 6 வயதில் இருந்து அவன் பள்ளிக்கும் செல்லவில்லை. வெவ்வேறு மருத்துவமனைகளில் பார்த்தும் அவனை குணப்படுத்துவதில் சிரமம் இருந்தது. இதனிடையே எனது மகனை பிஎஸ்ஜி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். எனது மகனைக் காப்பாற்றிய மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்களுக்கும் நன்றி. என்றார்.

