கோவையின் முக்கிய சாலையா இது? மக்களை வழுக்கி விழ வைப்பது தான் நோக்கமா? – PHOTOS

கோவை: சிங்காநல்லூரில் சேறும் சகதியுமான சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

சிங்காநல்லூர் உழவர் சந்தை முதல் ஒண்டிப்புதூர் வரையிலான திருச்சி சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது.

இந்த சாலை தற்போது வரை மீண்டும் புனரமைக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக இருந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடுப்பு வலி வந்தது தான் மிச்சம்.

Advertisement

Single Content Ad

இதனிடையே தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தோண்டப்பட்ட சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. தினமும் இவ்வழியாகச் செல்லும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கோவையின் பிரதான சாலைகளுள் ஒன்றான திருச்சி சாலையின் நிலை படுமோசமாக இருக்கும் நிலையில், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சேற்றுக்குள் சிக்கி வழுக்கி விழும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து சிங்காநல்லூரைச் சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில், “பல நாட்களாக திருச்சி சாலை இந்த கதியில் தான் உள்ளது.

பொதுமக்கள் தொடர்ந்து விபத்துகளில் சிக்குகின்றனர். பெரிய அளவில் சேதம் ஏற்படாததால் இந்த விபத்துகள் போலீஸ் ரெக்கார்டில் பதிவாவதில்லை.

வழுக்கி விழுந்து, கைகால் முறிவு, இடுப்பு வலியுடன் மக்கள் அவதியடைவது தான் அரசு நிர்வாகத்தின் நோக்கமா? இதனிடையே குறுகலான இந்த சாலையில் ஆங்காங்கே யு டர்ன்களும் அமைக்கப்பட்டுள்ளன. தார் சாலை எது? சகதி எது? என்று தெரியாமல் வாகனங்களை ஓட்டிச் செல்லும் நிலையில், இந்த யூடர்ன்களும் இடையிடையே வருவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது” இவ்வாறு பாஸ்கரன் ஆதங்கம்பட கூறினார்.

Recent News

Latest Articles