கோவை: கோவை செம்மொழி பூங்காவை மலைவாழ் பள்ளி குழந்தைகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செம்மொழி பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு செயற்கை நீர்வீழ்ச்சி, குழந்தைகள் விளையாட்டு பகுதி உட்பட ஆயிரக்கணக்கான மலர் செடிகள், பாலைவன செடிகள், மூலிகை செடிகள், கடையேழு வள்ளல்கள் கொடை சிற்பங்கள், திறந்தவெளி அரங்குகள் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து வருகின்றனர். விடுமுறை தினங்களில் அதிகளவு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த செம்மொழி பூங்கா கோவை மாநகரில் முக்கியமான பொழுதுபோக்கு இடமாக தற்போது மாறி உள்ளது.
அதே சமயம் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக இங்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு இங்குள்ள பல்வேறு செடிகள், மலர்கள், மூலிகை செடிகள் பற்றி எடுத்துரைக்கபடுகிறது.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதி காளிதிம்பம், மாவனத்தம், பெஜலட்டி, மந்தைதொட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பள்ளி குழந்தைகள் கல்வி சுற்றுலாவிற்காக அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு செம்மொழி பூங்கா முழுவதும் காண்பிக்கப்பட்டு அங்குள்ள செடிகள், கடையேழு வள்ளல்களின் கொடைகள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது. ஈரோட்டில் இருந்து கல்வி சுற்றுலா வந்த மலை கிராம பள்ளி மாணவர்கள் ஆர்வமுடம் செம்மொழி பூங்காவை சுற்றுபார்த்து மகிழ்ந்தனர்.

