கோவை: பேருந்தை பின்னோக்கி இயக்கி விபத்தை ஏற்படுத்திய நடத்துனரை பொதுமக்கள் பிடித்து தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் நகரப் பேருந்துகளும், மினி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது கணுவாயில் சிவன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்ற வருவதால் அங்கு அதிகளவிலான மக்கள் கூட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீராம் என்ற தனியார் மினி பேருந்து கணுவாய் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிய பிறகு அப்பேருந்தின் நடத்துனராக பணியாற்றும் சிவராஜ் என்பவர் பேருந்தை இயக்கி உள்ளார். அப்போது பின்னோக்கி இயக்கியதாக தெரிகிறது.
அச்சமயம் பிரேக் பிடிக்காததால் பேருந்தின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சில இருசக்கர வாகனங்கள் மீதும் ஒரு பெட்டி கடையின் மீதும் மோதி நின்றுள்ளது. இதில் இருசக்கர வாகனங்களும் பெட்டிக்கடையின் முன்புறம் சேதமடைந்தது.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பின்னால் வருவதை கண்டு அருகில் இருந்த மக்கள் அங்கிருந்து விலகிச் சென்றதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் பேருந்தை இயக்கிய நடத்துனர் சிவராஜ் கீழே இறக்கிய பொதுமக்கள் அவரை தாக்கி தடாகம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பிரேக் பழுதாகி இருக்கலாம் என்று பேருந்தின் ஓட்டுனர் தெரிவித்த நிலையில் இதனை எல்லாம் சரி செய்யாமல் எதற்காக பேருந்து இயக்குகிறீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உடனடியாக பேருந்து சரி செய்து பின்னர் இயற்ற வேண்டும் என்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் இதுபோன்று பழுதடைந்து வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

