கோவை: தொழில்துறை வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா அமைப்பின் சார்பில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜிதன் ராம் மன்ஜி அவர்கள் தொழில்துறையினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கொடிசியா அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளைச் சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கொடிசியா அமைப்பின் சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான தகவல் கையேடு மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கான வழிகாட்டு கையேடு ஆகியவற்றினை மத்திய அமைச்சர் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை வளர்ச்சிக்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் வழங்கினர். மேலும் மாணவர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்திய அமைச்சரோடு கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய துறையாக தொழில் துறை உள்ளது. அதன் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் 2030 ஆம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் மூன்றாவது நாடாக இந்தியாவை உருவாக்க தொழில்துறை வளர்ச்சிக்கான அனைத்து விதமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார் என குறிப்பிட்டார்.
மேலும் பேசியவர், வேலைவாய்ப்பு அதிகம் உருவாக்கும் துறையாக சிறு குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. எனவே இதனை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கும் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

