கோவை: துடியலூர் அருகே உருமாண்டிபாளையத்தில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ், உருமாண்டிபாளையம், பொன்விழா நகரை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 40). தொழிலதிபரான இவர் கணபதிபுதூரில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு நந்தகோபால் மற்றும் அவரது மனைவி குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியே சென்று இருந்தனர். பின்னர் நந்தகோபாலின் மனைவி வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி பொருட்கள், தங்கத் தட்டு மற்றும் ரூ.50,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து நந்தகோபால் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வீட்டில் யாரும் இல்லாததை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

