கோவை:கோவை வெள்ளலூரில் பல நாட்களாக வீட்டில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளலூர் அருகே உள்ள சக்தி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபினந்த் (வயது 43). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி அவரை விவாகரத்து செய்து பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அபினந்த் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அருகில் இருப்பவர்கள் அவரது சகோதரர் எழில் மற்றும் போத்தனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அபினந்த் இருந்த வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
அதன் பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் அழுகிய நிலையில் அபினந்த் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அபினந்துக்கு சில உடல் உபாதைகள் இருந்ததாகவும், அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அபினந்த் வீட்டில் மயங்கி விழுந்து இறந்தாரா, இல்லை அவர் தன் வாழ்வை முடித்துக்கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

