கோவை: 2026 சட்டமன்ற தேர்தலில்
கூட்டணி ஆட்சி என்ற தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமை தொகை 3 மாதங்களுக்கு ரூ.3000, கோடைகாலத் தொகை ரூ.2000 என 5000 ரூபாய், 1.31 கோடி மகளிர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியது. அது இரு விதமான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.
அரசின் பணத்தை ஆளுங்கட்சி ஓட்டுக்களுக்காக வாரி வழங்குவது, மகளிர் உரிமை திட்டத்திற்கான நிதி பட்டியல் பிரிவு மக்களை மேம்படுத்த SC சிறப்பு உட்கூறு திட்டத்தை பயன்படுத்தி இருக்கிறது என்பது குறித்தும் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு உட்கூறு திட்டத்தை பயன்படுத்தவில்லை என்ற அறிக்கையை தமிழக அரசு கொடுத்து இருக்கின்றது.
இது தொடர்பாக சில ஆதாரங்களை செய்தி குறிப்பில் கொடுத்துள்ளது. 2023-26 வரை சிறப்பு உட்கூறு நிதியில் இருந்துதான் மகளிர் உரிமை தொகை எடுக்கப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிப்பட்டுள்ளது. மொத்தம் 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்த நிதியில் இருந்து மகளிர் உரிமை தொகைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி வேறு கவர்ச்சி திட்டங்களுக்கு கொடுக்க கூடாது என விதி இருக்கின்றது. ஆனால் கடந்த காலங்களில் கலைஞர் டி.விக்கும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கும் இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தை பயன்படுத்துவது தவறானது, கண்டனத்திற்குரியது இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அதிமுக ஆட்சியிலும் இந்த பணம் பயன்படுத்தபட்டது குறித்து சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றேன். நீதிமன்றம் செல்வதை பற்றி பின்னர் சிந்திப்போம்.
தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. மகளிர் உரிமை திட்டத்திற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை பயன்படுத்துகின்றனர் என்பது தான் என் குற்றச்சாட்டு. 20 ஆண்டுகளுக்கும் சேர்த்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக அரசு கடமையில் இருந்து தவறி இருக்கின்றது.
மகளிர் உரிமை தொகை பணத்தை நிறுத்த பாஜக திட்டமிடுகிறது என முதல்வர் குற்றம் சாட்டியது குறித்து பாஜகவிடம் தான் கேட்க வேண்டும்.
அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பேன். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி என்ற தீர்மானத்தில் புதிய தமிழகம் தெளிவாக, உறுதியாக, வலுவாக இருக்கின்றோம்.
புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி அறிவிப்பு கோவையிலிருந்து தான் வரும். தமிழக வெற்றி கழகததிற்கு பிற்பகல் 12 மணிக்கு கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது தவறு. 12 மணிக்கு கூட்டம் நடத்தினால் சன் ஸ்ட்ரோக் வரும் என ஒரு மருத்துவராக இதை சொல்கிறேன்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

