டெல்லி: மின்னல் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? என்ற எச்சரிக்கை செய்தியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
மழைக் காலங்களில் மின்னல் தாக்கும் அபாயம் அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் உயிரிழப்புகள், காயங்கள் போன்றவற்றைத் தடுக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) முக்கியமான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
“Be Smart, Be Prepared!” எனும் முழக்கத்துடன் வெளியான இந்த அறிவுறுத்தலில், மின்னல் தாக்கும்போது வீட்டினுள் அல்லது வெளியே இருக்கும் பொதுமக்கள் எதைச் செய்யவேண்டும், எதைத் தவிர்க்கவேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டினுள் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மின்னல் ஏற்படும் போது வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும்.

வயர் இணைப்புடன் கூடிய தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம்.
ஜன்னல்கள், கதவுகள் மற்றும் வரண்டாக்கள் அருகில் இருக்க வேண்டாம்.
கழிவுநீர் குழாய்கள் மற்றும் உலோக குழாய்களைத் தொட வேண்டாம்.
வீட்டின் வெளியே இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மரத்தின் கீழ் அல்லது அருகில் நிழலில் நின்றால் ஆபத்து. கூட்டமாகவும் நிற்க வேண்டாம்.
தகரச் சீட்டு பொருத்திக் கட்டப்பட்ட கட்டடங்கள் அருகே செல்லவேண்டாம்.
உலோகப் பொருட்கள், மின் மற்றும் தொலைபேசி கேபிள்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருங்கள்.
குளங்கள், ஏரிகள், படகுகள் போன்ற நீர்நிலைகளிலிருந்து வெளியேற வேண்டும்.

வாகனத்திற்குள் இருந்தால், அதனுள்ளே இருங்கள். வெளியேற வேண்டாம்.
மின்னல் தாக்கிய பிறகு என்ன செய்வது?
தேவைப்பட்டால் CPR (Cardio Pulmonary Resuscitation) செய்யவும். உடனடியாக மருத்துவ உதவிக்காக தொடர்பு கொள்ளவும்.
மழைக்காலங்களில் விழிப்புடன் இருங்கள் வாசகர்களே. இந்த விழிப்புணர்வு செய்தியை உங்கள் குடும்பத்தினர், சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்