கோவை: கோவையில் கட்டிட கலைஞர், நகை வியாபாரி உட்பட 3 பேரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சுகுணாபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (27). இவர் பெங்களூரில் கட்டிட கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது வாட்ஸ் ஆப்பில் சமீபத்தில் குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. லிங்க்-ஐ கிளிக் செய்து கலையரசன் தனது விவரங்களை பதிவிட்டார்.
Advertisement

பின்னர் அவரை தொடர்புகொண்ட நபர், நாங்கள் ஆன்லைனில் கொடுக்கும் டாஸ்க்கை முடித்து கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும், அதற்கு சிறிது முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனை நம்பி கலையரசன் சிறிய தொகையை முதலீடு செய்ததில் அதிக லாபம் கிடைத்தது. தொடர்ந்து அவர் பல்வேறு கட்டங்களாக ரூ.7லட்சத்து 30 ஆயிரத்து 509 முதலீடு செய்தார்.
அதன் பின்னர் அவருக்கு அதிக லாப தொகை வந்ததாக ஆப்-ல் காட்டியுள்ளது. ஆனால், அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அந்த நபரை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது, மேலும் பணம் அனுப்பினால் தான் மொத்த பணத்தையும் திரும்ப பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலையரசன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவரும் இவரது சகோதரரும் நகை வியாபாரம் செய்து வருகின்றனர். இருவரும் தனியார் வங்கியில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.
இந்நிலையில், மணிகண்டன் சகோதரர் வாட்ஸ் ஆப்பிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படிருந்தது. அதன் புரோபைலில் வங்கி சிம்பல் இருந்ததால், அதனை நம்பிய அவரது சகோதரர் லிங்க்-ஐ கிளிக் செய்து ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.9.38 லட்சம் எடுக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த மணிகண்டன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் நிதீஷ் (36), தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் ஆப்புக்கு ஆன்லைனில் தங்கம் வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என தகவல் வந்தது.
அதில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு நிதீஷ் பேசினார். பின்னர் அதனை நம்பி அவர் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.13.21 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு அதில் லாபம் கிடைக்கவில்லை.
மொத்தமாக ரூ. 13.21 லட்சத்தை சுருட்டி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.