கோவை: கோவை விமான நிலையத்தில் வானதி சீனிவாசனை காங்கிரஸ் கட்சியினர் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
கோவை விமான நிலையத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனுடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டிய காங்கிரஸ் கட்சியினரின் செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை விமானம் மூலம் கோவை வந்தார்.
முன்னதாக அவரை வரவேற்பதற்காக கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு இருந்த சூழலில் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது அங்கு திரண்டு இருந்த காங்கிரஸ் கட்சியினர் வானதி சீனிவாசன் உடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
இதனிடையே புகைப்படம் எடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டியது ஆச்சரியப்பட வைத்தது.

