கோவை: கோவையைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு மருத்துவச் செலவுக்கு உதவி தேவை என்று குழந்தையின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர்கள் அஜய்-சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் லியோனல் தாமஸ் என்ற மகன் உள்ளார்.
இந்த குழந்தைக்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு மரபணு நோய் (Spinal Muscular Atrophy – SMA) கண்டறியப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மற்றவர்களைப் போன்று கை, கால்களை அசைக்க முடியாது.
Advertisement

மேலும், தலை கழுத்துப் பகுதியும் சரிவர நிற்காது. இந்த குழந்தைக்கு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே குழந்தையை குணப்படுத்த ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசியைச் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விரைவில் அந்த ஊசியைச் செலுத்தாவிட்டால் குழந்தையின் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், குழந்தையின் பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
மிகப்பெரிய தொகையைக் கட்டணமாகச் செலுத்த முடியாது என்பதால் அரசு மற்றும் தனியார் அமைப்புகளிடம் பெற்றோர் உதவி கோரியுள்ளனர்.
கிரவுட் ஃபண்டிங், சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி கோரி பணத்தை ஈட்டி வருவதாகக் கூரும் பெற்றோர் இதுவரை ரூ.20 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இன்ஸ்டாகிராமில் Leo fights SMA என்ற பக்கத்தில் குழந்தை குறித்த விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.
தங்களால் இயன்ற நிதியை இக்குழந்தைக்கு உதவியாகக் கொடுக்க நினைக்கும் பொதுமக்கள் 7397504777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.