Loan App Scam: கடன் வாங்கும் மக்களே கவனம்… எதிரிக்கும் வரக்கூடாத வாசகரின் வேதனை…!

Loan App Scam: அவசரத்திற்காக ஆன்லைன் செயலிகளில் லோன் வாங்கிவிட்டு, சொல்லிலடங்கா துயரை அனுபவித்த நமது வாசகர் ஒருவர், விழிப்புணர்வுக்காக பகிர்ந்த அதிர்ச்சிகர தகவல்களை இங்கு பகிர்கிறோம்.

பணக் கஷ்டம் என்று வந்துவிட்டால் மனிதன் மனம் நிலையாக இருப்பதில்லை. எப்படியாவது பணத் தேவையைப் பூர்த்தி செய்துவிட வேண்டும் என்று துடிக்கும் மனிதன், தன் வாழ் நிலைக்கு ஏற்ப சில முடிவுகளை எடுக்கிறான்.

சிலர் கடன் வாங்குகின்றனர். சிலர் தவறான வழிகளைப் பயன்படுத்தி பணத்தை ஈட்ட முயல்கின்றனர்.

தங்கள் நிதிச்சுமையை ஈடுகட்ட பல்வேறு நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி, தற்காலிக மற்றும் அவசரமாக தீர்வு காண முயலும் நபர்களுக்காகவே மோசடி ஆசாமிகள் பலர் வலையை விரித்துக் காத்திருக்கின்றனர்.

இதற்காகவே பல மோசடி பேர் வழிகள் சில ஆப்களை உருவாக்கியுள்ளனர்.

இவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பதிவிடுகின்றனர். அதில், எந்த ஒரு கியாரண்டி அல்லது ஆவணங்களும் இல்லாமல் தங்கள் Loan App மூலம் இரண்டே நிமிடங்களில் கடன் தருவதாகக் கூறுகின்றனர்.

பண நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பொதுமக்கள் இதனை நம்பி அந்த செயலிகளை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்கின்றனர்.

அதனை Log In செய்கையில், நமது இ-மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். சில ஆப்கள் நமது ஆதார், பான் நம்பர்களை கேட்கிறது. சில ஆப்கள் எந்த விவரங்களையும் கேட்பதில்லை. அவர்கள் நோக்கமே மோசடி என்பதால் ஆதாரங்களை எதிர்பார்ப்பதில்லை.

அத்தனை விவரங்களையும் உள்ளீடு செய்யும் போதே, இடையில் Notification அனுப்பப்படும். அதில், உங்கள் செல்போனின் Gallery மற்றும் Contact விவரங்களை Access செய்ய அனுமதி கேட்கிறது. இந்த அனுமதியை நாம் வழங்கினால் மட்டுமே மேற்கொண்டு அந்த செயலியை நம்மால் பயன்படுத்த முடியும்.

அவசரத் தேவை உள்ளவர்கள் கண்ணை மூடிக்கொண்டு தங்கள் செல்போனில் உள்ள அத்தனை தரவுகளையும் பார்க்க அந்த ஆப்பிற்கு தாராளமாக அனுமதி கொடுக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து குறைந்த பட்ச தொகை முதல் ரூ.20,000 அல்லது 30,000 வரை அந்த ஆப் மூலம் கடன் பெறுகின்றனர். அப்போது முதல் அவதியும், மன உளைச்சலும் அவரைத் தொற்றிக்கொள்கிறது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஹோப் காலேஜ் பகுதியைச் சேர்ந்த News Clouds Coimbatore வாசகர் கூறியதாவது:-

ஆப் மூலம் எடுக்கும் கடனை முறையாகச் செலுத்தினாலே வாங்கிய பணத்திற்கு பல மடங்கு வட்டியை நாம் கட்ட வேண்டியிருக்கும். ஆனால், EMI நாள் வந்ததும் முதலில் கூடுதல் வட்டி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வருகிறது.

நான் பெற்ற கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்த எனக்கு நோட்டிபிகேஷன் வந்தது. அதனைக் கட்ட மறுத்ததால், ஒரு நபர் என்னை அழைத்து, கூடுதல் வட்டியுடன் கடனைக் கட்டக்கூறினார். நான் இதுகுறித்து கேள்வியெழுப்பிய போது தரக்குறைவாகப் பேசினார்.

இதனால் கோபமடைந்து தொடர்பைத் துண்டித்தேன். பிறகு மீண்டும் வேறு ஒரு எண்ணிலிருந்து அழைத்த நபர், எனது போட்டோக்களை கேலரியில் இருந்து எடுத்துவிட்டதாகக் கூறினார். உதாரணமாக ஒரு போட்டோவை வாட்ஸ்-ஆப்பில் பகிர்ந்துள்ளதாகவும், அதனைப் பார்த்துவிட்டு நானே திரும்ப அழைக்க வேண்டும் என்றும் மிரட்டிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

நான் எனது வாட்ஸ்-ஆப்பை திறந்து பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன். அதில், எனது மனைவி மற்றும் மகளுடன் நான் எடுத்த, எனது கேலரியில் இருந்த புகைப்படங்கள் பல நிர்வாணமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. எனது குடும்பத்தினரை அந்த நிலையில் பரக்கவே முடியவில்லை.

முதற்கட்டமாக இதனை எனது தாய் தந்தையரின் செல்போன் எண்ணுக்கு (அம்மா, அப்பா என்று பதிந்து வைத்திருந்த எண்கள்) மட்டும் பகிர்ந்து, அந்த ஸ்கிரீன்ஷாட்டையும் அனுப்பியிருந்தனர்.

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

மேலும், பிரச்சனை செய்தால் எனது செல்போனில் நான் வைத்திருக்கும் அனைத்து நம்பர்களுக்கும் அந்த நிர்வாண புகைப்படங்களை அனுப்ப இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான நான், வேறு வழியின்றி வாங்கிய ரூ.30,000 கடனுக்காக ஒரே மாதத்தில் ரூ.67,000 செலுத்தினேன். இதுகுறித்து புகார் அளிக்கவும் முடியாமல் தவிக்கிறேன். நம்ப வைத்து என்னிடம் மோசடி செய்துவிட்டனர். இன்று வரை வேதனையிலிருந்து என்னால் மீள முடியவில்லை. யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக இத்தகவலைக் கூறுகிறேன். என்று தழுதழுத்த குரலில் தெரிவித்தார்.

இன்னும் சில மோசடிப் பேர்வழிகள், நீங்கள் பணம் அனுப்பிய பிறகும், பணம் வந்து சேரவில்லை என்றோ அல்லது, நீங்கள் தவறான வங்கி அல்லது UPI கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டீர்கள் என்றோ கூறி, மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் கோவை மாநகர போலீசார் கூறுகையில், “கோவையில் இதுபோன்ற புகார்கள் தினமும் மாநகர சைபர் கிரைம் பிரிவுக்கு வருகின்றன. பலர் பணத்தை இழந்து வருகின்றனர்.

இந்த குற்றங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும், புதிது புதிதாக ஆப்கள் வருகின்றன. இந்த விஷயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நம்பகத் தகுந்த மற்றும் RBI அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் செயலிகள் மூலம் மட்டுமே கடன் பெற வேண்டும். அனைத்து செயலிகளுக்கும் ஆக்சஸ் கொடுக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்” என்றனர்.

வாசகர்களே, நிதிச்சுமை என்று அங்கீகாரமற்ற ஆப்கள் மூலம் கடன் பெற முயல வேண்டாம். அது நிச்சயம் உங்களை மோசடிக் கடலில் தள்ளும் என்பதை நினைவில் வைத்திருங்கள். இதனால், பணத்தை இழப்பது மட்டுமல்லாது, குடும்ப அமைதியையும், நிம்மதியையும் இழக்க நேரிடும்.

இந்த மோசடியில் யாரேனும் சிக்கியிருந்தால் https://cybercrime.gov.in/ என்ற அரசு இணையதளத்தில் புகார் தெரிவியுங்கள். மேலும் அருகில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கும் சென்று புகார் அளியுங்கள். மேலும், பணம் இழப்பதையாவது தடுக்கலாம்.

பொது நலனுடன்
செய்திக்குழு,
நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர்

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அமலானது தேர்தல் நடத்தை விதிகள்; பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.