கோவை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை வந்த அவரை விமான நிலையத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.
முன்னதாக அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி உள்ளவர். உழைத்தவர்களையும், தொண்டர்களையும் மதிக்கக் கூடியவர். எடப்பாடியார் கொஞ்சம் யோசிக்க வேண்டும், ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி.
சின்னம்மா, என்று சொன்னவர் இப்போது அப்படிச் சொல்வதில்லை. கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்லும் அவருடைய தமிழ் ஆற்றல் அவ்வளவுதான். முதலமைச்சரை குறை கூறுவதற்கு முன் யோசிக்க வேண்டும்.
மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம், கோவையில் பெரியார், சேலத்தில் பாரதிதாசன், கடலூரில் அஞ்சலையம்மாள், திருச்சியில் காமராசர், நெல்லையில் காயிதே மில்லத் என அனைத்து தலைவர்களின் பெயர்களும் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், எம்ஜிஆர் பெயரை ஸ்டாம்ப் சைஸில் கூட போடாதவர்கள் எதிர்க்கட்சியினர். அதிமுக ஆட்சியில் 71 ரயில்வே பாலங்கள் அறிவிக்கப்பட்டன. நாங்கள் 36 பாலங்களை நிலம் எடுத்து கட்டி முடித்துள்ளோம்.
செம்மொழி பூங்காவை கருணாநிதி அறிவித்தபோது, அதைச் செயல்படுத்தாதவர்கள் அதிமுக.,வினர். ஆனால், கோவ மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததற்கு நடுநிலை மக்கள் பாராட்டுகின்றனர்.
கோவை அவினாசி சாலை மேம்பாலம் அதிமுக அறிவித்த திட்டமாக இருந்தாலும், 5 சதவீதப் பணிகளை மட்டுமே முடித்திருந்தீர்கள். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது அதிமுக தான்.
என்று அமைச்சர் பேசினார்.




